போபால்:
போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்கூருக்கு, சாமியார்களே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கடந்த மே 8-ஆம் தேதி கம்ப்யூட்டர் பாபா எனப்படும் நம்தியோ தாஸ் தியாகி தலைமையில் போபாலில் பேரணியும் சென்றனர். இதில் சுமார் 7 ஆயிரம் சாமியார்கள் கலந்து கொண்டனர்.
“காவி அணிந்திருப்பதால் பிரக்யா சிங் துறவியாகிவிட முடியாது. மத்தியில் கடந்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி, ராமர் கோயிலை கட்டவில்லை. மதத்தின் பெயரால் பாஜக மக்களை ஏமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டிய சாமியார்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு தங்களின் ஆதரவையும் அளித்தனர். அவரது வெற்றிக்காக யாகங்களையும் நடத்தினர்.
இவர்களில் மகாமண்டலேஸ்வரர் சுவாமி எனப்படும் பைரக்யானந்த் என்ற சாமியாரும் ஒருவராவார். இவர், ‘திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால், தாம் ஜீவசமாதி அடைவேன்’ என்ற அளவிற்குப் போனார். மேலும் திக்விஜய்சிங் வெல்வதற்காக நாள்தோறும் 5 கிலோ காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு யாகமும் வளர்த்து வந்தார்.
ஆனால், திக்விஜய் சிங் தோற்று, பிரக்யா சிங் தற்போது 3 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று விட்ட நிலையில், ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பைரக்யானந்த் சாமியார் காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஜீவசமாதி அடைந்துவிட்டாரா? என மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.